ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் 2023 குரு பூர்ணிமா செய்தி

June 24, 2023

“குரு சிஷ்ய உறவின் நியதிகளில் நீங்கள் உறுதியாக இருந்தால், ஆன்மீகப் பாதை மிக எளிதாக மாறும். பிறகு நீங்கள் வழி தவறிச் செல்ல மாட்டீர்கள். மாயை உங்களை அந்தப் பாதையில் இருந்து விலக்குவதற்கு எவ்வளவு முயன்றாலும் சரி, இறை அனுபூதி அடைந்த குரு உங்களுடைய இன்னல்களை அறிந்து, மீண்டும் நீங்கள் இறைப்பாதையில் நிலைப்பதற்கு உதவி செய்வார். நீங்கள் குருவோடு ஒத்திசைந்திருந்தால், இதனைத் தான் அவர் உங்களுக்காகச் செய்வார். உங்களுக்கும் குருவிற்கும் ஆயிரக்கணக்கான மைல்கள் இடைவெளி இருந்த போதிலும், அவருடைய உதவி உங்களை வந்தடையும். இந்த பூமியில் அவர் இல்லாதிருக்கும் போதும் என் குரு என்னுடன் இருப்பதை நான் எப்பொழுதும் உணர்கின்றேன். குருவின் வழிகாட்டுதலையும், அருளாசிகளையும் நீங்கள் பெற்றிருப்பது–இதுவே ஆன்மீகப் பாதையில் முன்னேறி செல்வதற்கான மிக எளிதான வழி.”

—பரமஹம்ஸ யோகானந்தர்

அன்பே,

நிபந்தனையற்ற அன்பு மற்றும் நட்பின் வெளிப்பாடாகத் திகழும், ஒவ்வொரு சீடனிலும் தூங்கிக் கொண்டிருக்கும் இறைவனை எழுப்புவதை தன் ஒரே நோக்கமாக கொண்டிருக்கும் ஆன்ம அனுபூதி அடைந்த குருவினிடத்து வழிநடத்தப்படுதலே, இந்த உலகில் ஒருவர் இறைவனிடமிருந்து பெறக்கூடிய மதிப்புமிக்க வரமாகும். YSS/SRF இல் உள்ள நாம் அனைவரும் நம் அன்பிற்குரிய சத்குரு பரமஹம்ஸ யோகானந்தரில் அப்படிப்பட்ட ஒருவரிடமே ஈர்க்கப்பட்டுள்ளோம்.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்நன்னாளில், முக்தியளிக்கும் போதனைகளை நமக்கு வழங்கிய, அனைவரின் ஆன்மாவிலும் இறைவனுக்கான அன்பை எழுப்ப தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அந்த புனித குருவுக்கு நன்றி செலுத்தும் வகையில் நம் இதயத்தின் அன்பையும் பக்தியையும் செலுத்துவதில் ஒன்றிணைவோம். தன்னை மீண்டும் இறைவனிடம் வழிநடத்தும் தூய, அப்பழுக்கற்ற ஞானம் கொண்ட, தனது குருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரை சந்திக்கும் வரை உண்மையான மகிழ்ச்சியையும் ஞானத்தையும் அறிந்ததில்லை என்று பரமஹம்ஸர் கூறினார். நீங்கள் இந்தப் பாதையில் பயணித்து, நமது தெய்வீக குருதேவர் நமக்காக வகுத்துக் கொடுத்த புனித பயிற்சியை நேர்மையுடன் கடைப்பிடிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் பரமஹம்ஸரின் வழிகாட்டும் பாதுகாப்பையும் அன்பான இருப்பையும் நீங்கள் இன்னும் ஆழமாக உணர்வீர்கள். அவரது மதிமயக்கும் ஞானம் மற்றும் அன்புடன் நாம் இசைவித்திருப்பதன் மூலம் தான் நம் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நீங்கள் தியானத்தில் ஆழந்து மூழ்கும்போது, இறைவனும் குருதேவரும் எப்போதும் அருகில் இருப்பதையும், உங்களை வழிநடத்தி, நேசித்து, உயர்த்துவதையும் நீங்கள் உணர்வு பூர்வமாக அறிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இறை அன்பு மற்றும் அருளாசிகளுடன்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர