2023 கிறிஸ்துமஸிற்கான தலைவரின் செய்தி மடல்

12 டிசம்பர், 2023

அன்பரே,

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் இருந்து இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! இந்த புனித ஆன்மீக வாக்குறுதி பருவத்தில் நாம் பிரவேசிக்கையில், படைப்பில் இறைவனின் அன்பான, சர்வ வியாபக விழிப்புணர்வு எனும் எல்லையற்ற கிறிஸ்து உணர்வு நிலையிலிருந்து ஆற்றல் மிக்க ஆறுதல் அளிக்கும் ஒரு தெய்வீக அமைதி வெளிப்படுகிறது. நாம் ஏற்புத் திறன் கொண்டவர்களாக மாறினால், அந்த மேம்படுத்தும் அமைதி அதிர்வுகள், ஆன்மத்தின் உண்மை இயல்பின் ஒரு உணர்வுபூர்வ அனுபவத்தை நமக்கு அளித்து, நம்மை ஆழமாக மாற்றும் சக்தியை நமக்கு அளிக்க வல்லவையாகின்றன. அந்த விழிப்பூட்டும் ஆன்ம-புரிதல்தான் கிறிஸ்துமஸ் சமயத்தில், நம் தெய்வீக அன்புக்குரிய இறைவனால் சாசுவத பாதுகாப்பு எனும் உறையிலிட்டு, அவனால் உங்கள் பெயர் பொறிக்கப்பட்டு, மிகவும் மென்மையாக உங்கள் கைகளில் வைக்கப்படும், நீங்கள் பெறும் பரிசாக, இருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

“தியானம் கிறிஸ்து உணர்வு நிலை வாயிலைத் திறக்கிறது” என்று பரமஹம்ஸர் கூறினார். “நாம் விடாமுயற்சியுடனும், உணர்வுபூர்வமாக விழிப்புடனும் இருந்து, நம் ஒவ்வொருவரிடமும் உள்ள கிறிஸ்து உணர்வுநிலை தீப்பொறியில் இருந்து இறைவனின் அன்பும் ஒளியும் நம்மில் விரிவடையச் செய்வோமாக.” தன்னுடைய வெளிப்புறப் பணியின் பல கோரிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இறைவனிடம் இருதய பூர்வ விசுவாசத்துடன் கூட, தெய்வீகத் தந்தையுடன் ஆழ்ந்த தியான தொடர்பில் தன்னை ஆழ்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை இயேசு உருவாக்கிக் கொள்வார்.

அதே போல் நாமும், படைப்பின் நாடகத்தில் நம்முடைய வெளிப்புறப் பங்கைப் பொருட்படுத்தாமல், இறைவனுக்கான ஆர்வ ஏக்கத்துடன், நமது குருதேவர் நமக்களித்த புனித தியான முறைகளை பயிற்சிப்பதற்கு, உள்ளார்ந்து செல்லும் பொருட்டு வெளிப்புற விஷயங்களிலிருந்து விலகும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவோம், இயேசு மற்றும் மகாவதார பாபாஜியின் உத்தரவின் பேரில்தான் மதிப்புமிக்க பொக்கிஷமாக பண்டைய கிரியா யோக விஞ்ஞானம் இந்த யுகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் உத்திகள் மற்றும் வாழ்க்கை முறை மற்றும் இறைவனின் குழந்தைகளாக அவனுக்கான நம் பக்தி ஆகியவற்றின் மூலம், கிறிஸ்து மற்றும் மாபெரும் மகான்களின் ஊக்கமளிக்கும் உத்வேகத்தை, ஆற்றல், ஆனந்தம், ஞானம் மற்றும் அன்பு அனுபூதியாக மாற்ற முடியும். நாம் அவ்வாறு செய்யும்போது, அவர்களின் வாழ்க்கையில் பரிபூரணமாக வெளிப்பட்ட கிறிஸ்து உணர்வுநிலை நமக்குள்ளும் அதிகமாக பிறக்கும்.

நமது குரு போற்றிய இந்த உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், அனைத்து சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ளவும், அகமுகமாக வெற்றி அடையவும் நமக்கு வல்லமை அளிக்கும். கிரியா யோகம் என்னும் வானுலக வரத்தில் சரணடைவதன் மூலம், காலப்போக்கில் நமக்கும், நம் அன்புக்குரியவர்களுக்கும், நமது உலகத்திற்குமான தெய்வீக ஆதரவு உணர்வில் நம் உறுதிப்பாடு விரிவடையும்; நமது தெய்வீக கொடையாளரின் பாதுகாப்பு ஒளிக்கு நாம் ஒருபோதும் வெளியே இல்லை என்ற நமது உள்ளுணர்வின் உறுதி தரும் நம்பிக்கையை நாம் படிப்படியாகப் பெறுவோம். உங்களுக்காக நான் பிரார்த்திப்பது என்னவென்றால், இந்த கிறிஸ்துமஸிலும், எப்பொழுதும் உங்கள் இதயமும், இல்லமும் கிறிஸ்து பேரின்பத்தால் நிரப்பப்பட வேண்டும். மேலும், இறைவன், கிறிஸ்து மற்றும் குருமார்களிடமிருந்து தொடர்ந்து பாயும் நிபந்தனையற்ற அன்பினாலும் மேம்படுத்தும் அதிர்வுகள் மற்றும் நீடித்த அமைதியினாலும் எப்போதும் நிரப்பப்பட வேண்டும்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகவும் அருளப் பெற்ற கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர