ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் கிறிஸ்துமஸ் 2022 செய்தி

16 டிசம்பர், 2022

அன்பர்களே,

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து தெய்வீகத் தோழமை மற்றும் அன்புடன் உங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் பற்றிய அவரது ஆன்மாவை விழிப்பிக்கும் வெளிப்பாட்டால்- உங்களுக்குள்ளான கூடஸ்த [கிறிஸ்து] உணர்வுநிலையின் பிறப்பு, உங்கள் வாழ்க்கை புதிதாக ஒளிரட்டும். இது பெருமான் இயேசுவில் அவதரித்து எல்லையற்ற அன்பாகவும் தெய்வீக இணக்கமாகவும் அனைத்து படைப்புகளிலும் எப்போதும் பிரகாசிக்கிறது.

உண்மை, பரிசுத்தம், புனிதம் ஆகியவற்றின் ஒரு முன்மாதிரியாக இயேசு பூமிக்கு வந்தார் –கோட்பாட்டளவிலான இலட்சியங்களுக்காக அல்ல, மாறாக மனித குடும்பத்திற்கான உலகளாவிய நல்லிணக்கத்தை விரைவுபடுத்தக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க பரிணாம சக்தியாக வந்தார். நம்முடைய காலங்களில், மனிதர்கள் புனிதத்தையும் தெய் வீகத்தையும் அலட்சியப்படுத்துவதால், தெய்வீகமற்ற தன்மை மற்றும் அதர்மம் மிகவும் சாத்தியமானதாகத் தோன்றும் இந்த நேரத்தில், நம் அழியாத ஆன்மாக்களுக்குள், இயேசுவின் தெய்வீக குணங்கள் அனைத்தும் உள்ளன என்பதை உணர்ந்து செயல்படுவோம். குணப்படுத்தும் அமைதியையும் அனைத்தையும் உள்ளடக்கிய அன்பையும் அவர் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார்; அவரது உள்ளுணர்வு ஞானம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை, தியானத்தில் இறைத்தொடர்பு மற்றும் சாசுவத தந்தையுடனான ஒருமையால் தினசரி புதுப்பிக்கப்படுகின்றன – இந்த ஒளி மற்றும் ஆற்றலின் பிரகாசமான ஆதாரங்கள் உங்கள் இருப்பின் அமைதியான ஆழங்களில் காணப்படுகின்றன, உங்களின் விருப்பத்தாலும் ஆன்மீக உற்சாகத்தாலும் மட்டுமே அவற்றை ஒளிர்விக்க காத்திருக்கின்றன.

கிறிஸ்து மற்றும் அனைத்து மகான்களைப் போலவே வாழ்வதற்கு துணிவு தேவை – அனைவருக்கும் நிபந்தனையற்ற அன்பு, சேவை மற்றும் மன்னிப்பு, இறைவனிடம் ஒருமுனைப்புடனான விசுவாசம் மற்றும் பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துதல் – ஆனால் அப்படி வாழ்வது நம் சொந்த வெல்ல முடியாத புனித சாராம்சத்தைப் பற்றிய பூரண மகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் மற்றவர்களுக்குப் புரிந்துணர்வையும் இதயப்பூர்வமான கருணையையும் அளிக்க முயற்சிக்கும்போது, ஒவ்வொரு முறையும் நமக்குள் உள்ள சிறந்ததை குறிக்கும் தெய்வீக குணங்களில் ஏதேனும் ஒன்றை நாம் வெளிப்படுத்தும்போது, நாம் கிறிஸ்துமஸின் உட்கருத்தை கொண்டாடுகிறோம். கிறிஸ்து உணர்வுநிலை நமக்குள் பிறக்கிறது.

கிறிஸ்துமஸ் காலத்தில், இறை அருளும் கிறிஸ்து-அன்பின் சிறப்பு அதிர்வுகளும் உயர்ந்த தளங்களிலிருந்து வெளிப்படுகின்றன, ஏற்புதிறன் கொண்ட அனைவரின் உணர்வுநிலையிலும் ஊடுருவுகின்றன. இந்த விண்ணுலகப் பொழிவு நம்மை இன்னும் ஆழமாக தியானிக்க உதவுகிறது, இறைவன் மற்றும் கிறிஸ்துவின் காலடியில் நம் ஆன்மாவின் அன்பையும் பக்தியையும் முன்னெப்போதினும் அதிக உறுதியுடன் சமர்ப்பிக்கச் செய்கிறது. இந்த கிறிஸ்துமஸ் பருவ விழாவின் வெளிப்புற நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் அன்பானவர்களுடன் அனுபவிக்கும்போது, மேலும் ஆழ்ந்த தியானத்தில் இயேசுவின் பிறப்பின் உள் கொண்டாட்டத்தையும் நீங்கள் அனுசரிக்கும்போது, உலகிற்கும் உங்கள் இல்லத்திற்கும் ஆனந்தத்தைக் கொணரும்,
பரம்பொருளடனான உங்கள் புனித ஒருமையை எப்போதும் நினைவூட்டும் கிறிஸ்து உணர்வுநிலையின் மென்குரல்களைஎப்போதும் உணர்வீர்களாக.

இறைவன், கிறிஸ்து மற்றும் குருமார்களின் தொடர்ச்சியான அருளாசிகள்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர