கிரியா யோக ராஜ உத்தி

Paramahansa Yogananda Showing Way

2011-ஆம் ஆண்டு தற்போதய உலகில் கிரியா யோகத்தின் 150வது ஆண்டு நிறைவைக் குறித்துக் காட்டுகிறது. ஓர் இரகசிய இமாலயக் குகையில் தன் பயணத்தைத் துவக்கியவாறு, ஆன்ம முக்திக்கான உத்திகளில் மிக உயர்ந்த இது, எல்லா இடங்களிலும் உள்ள இறைவனை-நாடுவோர் இறைவனுடனான நேரடியான தனிப்பட்ட தொடர்பின் அனுபவத்தை நோக்கிய வெகுவிரைவான ஆன்மீக முன்னேற்றத்தை அடைய உதவியவாறு, எல்லா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொகுப்பு கிரியா யோகம் எனும் முக்திக்கான முதன்மையான உத்தியின் இயல்பு, பங்கு, செயல்திறன் ஆகியவற்றின் மீதான பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்களிலிருந்து தேர்ந்தெடுத்தவைகளை முன்னிலைப்படுத்துகிறது; இது தற்போதைய யுகத்திற்கான ஒரு சிறப்பான அருளாசியாக இறைவனாலும் பெரிய மகான்களாலும் பூமிக்கு அனுப்பப்பட்டது.

150 ஆண்டுகளுக்கு முன்: தற்காலத்திற்கான யோக மறுமலர்ச்சி

தன் முப்பத்து மூன்றாம் வயதில் லாஹிரி மகாசயர் தான் மண்ணுலகில் அவதரித்திருந்த நோக்கத்தின் நிறைவேற்றத்தைக் கண்டார். அவர் தன் மகா குரு பாபாஜியை இமயத்தில் இராணிகேத் நகரின் அருகே சந்தித்தார், மற்றும் அவரால் கிரியா யோகத்தில் தீட்சை பெற்றார்.

இந்த மங்கலகரமான நிகழ்வு லாஹிரி மகாசயருக்கு மட்டுமே நிகழவில்லை; அது மனிதகுலம் முழுவதுக்கும் ஆன ஒரு நற்பேறுடைய நேரம் ஆகும். தொலைக்கப்பட்ட, அல்லது எப்போதோ-மறைந்து போன மிக உயர்ந்த யோகக்கலை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப் பட்டுக்கொண்டு இருந்தது.

புராணக் கதையில் கங்கை, வாடிய பக்தன் பகீரதனுக்கு ஒரு தெய்வீகத் தீர்த்தத்தை வழங்கியவாறு, விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்தது போல, 1861-ல் கிரியா யோகம் எனும் விண்ணுலக நதி இமயத்தின் இரகசியக் கோட்டைகளிலிருந்து மனிதர்கள் வசிக்கும் தூசு படிந்த பகுதிகளுக்குப் பாயத் துவங்கியது.

பொதுவாக சமூகத்திற்குத் தெரியாமல், ஒரு பெரிய ஆன்மீக மறுமலர்ச்சி 1861-ல் பனாரஸ் நகரின் ஓர் ஒதுக்குப்புற மூலையில் ஆரம்பித்தது. எப்படி மலர்களின் நறுமணம் மட்டுப்படுத்தப்பட முடியாதோ, அதே போல ஓர் இல்லறத்தானாக அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த லாஹிரி மகாசயராலும் தன் உள்ளார்ந்த மகிமையை மறைக்க முடியவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பக்த-தேனீக்கள் முக்தியடைந்த குரு எனும் தெய்வீகத் தேனை நாடிவரத் துவங்கினர்…. தீர்க்கதரிசியாக அவருடைய தனிச்சிறப்பு கிரியா என்ற ஒரு திட்டவட்டமான வழிமுறையின் மீது அவர் அளித்த நடைமுறைக்கேற்ற முக்கியத்துவத்தில் இருக்கிறது; அது எல்லா மனிதர்களுக்கும் யோக விடுதலையின் கதவுகளை முதன்முறையாகத் திறந்தது. தன் சொந்த வாழ்வின் அற்புதங்களைத் தவிர, பண்டைக்கால யோகச் சிக்கல்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் படியான ஒரு பயனுள்ள எளிமைக்கு உருமாற்றிக் கொண்டுவருவதில் எல்லா அற்புதங்களின் சிகரத்தையும் யோகவதார் நிச்சயமாக அடைந்தார். யோகவதார் அறிவித்தார், “தெய்வீக ஐக்கியம் சொந்த-முயற்சியின் வாயிலாக சாத்தியமாகிறது, மற்றும் அது இறையியல் நம்பிக்கைகளையோ அல்லது ஒரு பேரண்டச் சர்வாதிகாரியின் மனப்போக்கான விருப்பத்தையோ சார்ந்தது அல்ல.” மனிதனின் தெய்வீகத் தன்மையை யார் நம்ப முடியாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள், கிரியா திறவுகோலின் உபயோகத்தினால் கடைசியில் தங்களிடமே முழு தெய்வீகத்தை தரிசிப்பார்கள்.

ஒரு பண்டைக்கால அறிவியல்

பரமஹம்ஸ யோகானந்தர் தன் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூலில் ஓர் அத்தியாயத்தை “கிரியா யோக அறிவியலுக்கு” அர்ப்பணித்தார். காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா வில் நான்காம் அத்தியாயத்தில் உள்ள 1-2, 7-8 மற்றும் 28-29ம் சுலோகங்கள் மற்றும் ஐந்தாம் அத்தியாயத்தில் உள்ள 27-28ம் சுலோகங்கள் மீதான தன் விளக்கவுரைகளில் அவர் அதில் பொதிந்துள்ள யோகத் தத்துவங்களின் ஒரு மேம்பட்ட விளக்கத்தை அளித்தார். உண்மையான கிரியா யோக உத்திகளில் போதனை குறிப்பிட்ட ஆரம்பநிலை ஆன்மீக விதிமுறைப் பயிற்சிகளின் தேவையை நிறைவேற்றும் யோகதா சத்சங்கப் பாட மாணவர்களுக்கு வழங்கப் படுகிறது.
பகவத் கீதையில், பரமாத்மா அர்ஜுனனுக்கு போதித்தார்: “நான் இந்த அழியா யோகத்தை விவஸ்வானுக்கு (சூரிய-தெய்வம்) அளித்தேன்; விவஸ்வான் அந்த ஞானத்தை மனு-விற்கு (இந்து விதிமுறைகளை அளித்தவர்) வழங்கினார்; மனு அதை இஷ்வாகு-விற்கு (ஷத்திரிய சூரிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்) கூறினார். முறையான மரபுவழியில் இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட அதை இராஜ ரிஷிகள் (அரசாங்க ஆன்மீக ஆலோசகர்கள்) அறிந்திருந்தனர். ஆனால், எதிரிகளைப் பொசுக்குபவனே (அர்ஜுனன்)! காலமிகுதியால் இந்த யோகம் பூமியில் தொலைந்து போனது.” — IV:1-2 இவ்வாறு இந்த இரண்டு சுலோகங்கள் ஆன்மாவைப் பரம்பொருளுடன் இணைக்கும் நிலைபேறான, மாற்ற முடியாத அறிவியலாக விளங்கும் இராஜ (“அரச”) யோகத்தின் வரலாற்றுப் பழமையைப் பறைசாற்றுகிறது. அதே நேரத்தில், ஆழமாகப் புரிந்து கொள்ளப்பட்டால், அவை அந்த அறிவியலின் ஒரு சுருக்கமான விளக்கத்தை அளிக்கின்றன—எவற்றின் மூலம் ஆன்மா பேரண்டப் பேருணர்வுநிலையிலிருந்து மனித உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் அழிவு நிலைக்கு இறங்கியதோ, அந்தப்படிகள் மற்றும் அது எல்லாம்-பேரின்பமய நிலைபேறான பரம்பொருள் எனும் பேராதாரத்திற்கு மீண்டும் ஏற எடுக்க வேண்டிய பாதை…. மனிதனில் விண்ணேற்றம் கீழிறங்கிய பாதையைத் தலைகீழாகத் துல்லியமாகப் பின்பற்றுகிறது; அப்பாதையே எல்லையற்றவனுக்கான அகப்பெருவழி; அது எல்லா யுகங்களிலும் எல்லா மதங்களையும் பின்பற்றுவோர்க்கான தெய்வீக ஐக்கியத்திற்குச் செல்லும் ஒரே வழி. ஓர் உயிர் எந்த நம்பிக்கைகளோ அல்லது ஒழுங்குமுறைகளோ கொண்ட கிளைப்பாதையின் மூலமாகவும் அந்த ஒற்றைப் பெருவழியை அடைந்தாலும், உடல்-உணர்வுநிலையிலிருந்து பரம்பொருளுக்குச் செல்லும் இறுதி விண்ணேற்றம் எல்லோருக்கும் அதுவேயாகும்: பருப்பொருள் உணர்வுநிலையை உயிராற்றலில், உயிராற்றலை மனத்தில், மனத்தை ஆன்மாவில், மற்றும் ஆன்மாவைப் பரம்பொருளில் கரைத்தவாறு, உயிரையும் உணர்வுநிலையையும் புலன்களிலிருந்து நுட்பமான மூளை-முதுகுத்தண்டு மையங்களில் உள்ள ஒளிவாயில்களின் ஊடாக மேல்நோக்கிப் பின்வாங்குதல். விண்ணேற்ற வழிமுறையே இராஜயோகம்; அது படைப்பின் ஆரம்பம் முதலே அதில் ஒருங்கிணைந்து இருக்கும் நிலைபேறுடைய அறிவியல்.

தற்போதைய உலக யுகத்திற்கான சிறப்புமிக்க அருளாசி

ஓர் ஆன்மீக யுகத்திலிருந்து ஒரு பொருள்சார் யுகத்திற்கு மனிதன் கீழிறங்கி வரும் போது, யோக அறிவியல் ஞானம் தேய்கிறது மற்றும் மறக்கப்படுகிறது….மீண்டும் ஒருமுறை விண்ணேறும் இந்த அணுயுகத்தில், அழியா இராஜயோக அறிவியல் கிரியா யோகமாக மகாவதார் பாபாஜி, ஷ்யாம சரண் லாஹிரி மகாசயர், சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரின் மற்றும் அவர்களுடைய சீடர்களின் கருணையின் வாயிலாக மீண்டெழுகிறது….

ஒரு சிறப்புமிகு தெய்வீக அருளாசியாக, கிருஷ்ணர், கிறிஸ்து, மகாவதார் பாபாஜி, லாஹிரி மகாசயர், சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரின் வாயிலாக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வின் போதனைகளில் குறித்துக் காட்டப்பட்டது போல கிருஷ்ணரின் மூல யோகமும் கிறிஸ்துவின் மூலக் கிறிஸ்துவமும் ஒன்றிணைந்த தத்துவத்தின் வாயிலாக உலகம் முழுவதிலும் கிரியா யோகத்தைப் பரப்ப நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

மகாவதார பாபாஜியின் (நான் அவரை பரம்பொருளில் கிருஷ்ணருடன் ஒன்றாகி இருப்பது போல எப்போதும் உணருகிறேன்) மற்றும் கிறிஸ்து, எனது குருதேவர், எனது பரமகுரு ஆகியோரின் தூண்டுதலின் மற்றும் அருளாசிகளின் வாயிலாகவே நான் மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பப்பட்டேன் மற்றும் கிரியா யோக அறிவியலைப் பாதுகாப்பதற்காகவும் அதை உலகம் முழுவதும் பரப்புவதற்காகவும் ஆன கருவியாகச் சேவை செய்ய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வை நிறுவும் பணியை மேற்கொண்டேன்.

கிழக்கில் பகவான் கிருஷ்ணர் தெய்வீக யோக முன்மாதிரியாக இருக்கிறார்; மேற்கிற்கான இறை-ஐக்கியத்தின் முன்மாதிரியாக கிறிஸ்து இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆன்மாவைப் பரம்பொருளுடன் இணைக்கும் இராஜ யோக உத்தியை இயேசு அறிந்திருந்தார் மற்றும் தன் சீடர்களுக்கும் போதித்தார் என்பது “புனித யோவானுக்கு ஏசுவின் திருவெளிப்பாடு” என்ற ஆழ்ந்த குறியீட்டுப் பைபிள் அத்தியாயத்தில் சான்றளிக்கப்பட்டிருக்கிறது.

பாபாஜி எப்போதும் கிறிஸ்துவுடன் தொடர்பில் இருக்கிறார்; ஒன்று சேர்ந்து அவர்கள் மீட்பின் அதிர்வுகளை அனுப்புகின்றனர் மற்றும் இந்த யுகத்திற்காக முக்தியின் ஆன்மீக உத்தியைத் திட்டமிட்டிருக்கின்றனர்.

கிரியா யோகம் உண்மையின் மீது கவனத்தைக் குவிக்கிறது, குறுகிய பிடிவாதக் கொள்கையின் மீதல்ல

பகவத் கீதை இறைவன் அர்ஜுனனுடன் பேசுகிறார்

பகவத் கீதை இறைத் தோழமையின் அறிவியலான யோகத்தின் மிகவும் பிரியமான மறைநூல் ஆகும்—மற்றும் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சி, சமச்சீர் வெற்றி ஆகியவற்றுக்கான ஒரு காலத்தை வென்ற அறிவுறுத்தலும் ஆகும். பரமஹம்ஸ யோகானந்தரின் கீதையின் மீதான முழுமையான நூல் “காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா—ராயல் சயின்ஸ் ஆஃப் காட்-ரியலைசேஷன்” என்று பெயரிடப்பட்டுள்ளது; இது இரு பகுதிகளாக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, லாஸ் ஏஞ்சலீஸ் -ஆல் வெளியிடப்படுகிறது. அவர் எழுதினார்: “எனது குருதேவரும் பரமகுருமார்களும்—சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர், லாஹிரி மகாசயர், மற்றும் மகாவதார் பாபாஜி—இந்தத் தற்போதைய யுகத்தின் ரிஷிகள், தாமே இறையனுபூதி பெற்ற வாழும் மறைநூல்களாக விளங்கும் குருமார்கள், ஆவர். அவர்கள் வெகுகாலம் முன்பே தொலைந்து போன கிரியா யோக அறிவியல் உத்தியுடன் கூட, முதன்மையாக யோக அறிவியலுக்கும் குறிப்பாக கிரியா யோகத்திற்கும் தொடர்புடைய புனிதமான பகவத் கீதையின் ஒரு புதிய தெய்வீக வெளிப்பாட்டை உலகிற்கு மரபுரிமையாக வழங்கியுள்ளனர்.

லாஹிரி மகாசயரின் போதனை குறிப்பாக தற்போதைய யுகத்திற்குப் பொருத்தமானது ஏனெனில் அது எவரையும் பிடிவாதமாக நம்பச் சொல்வதில்லை, மாறாக நிரூபிக்கப்பட்ட கிரியா யோக உத்திகளின் பயிற்சியால் தனிப்பட்ட உணர்ந்தறிதல் மூலமாக ஒருவரைப் பற்றிய மற்றும் இறைவனைப் பற்றிய “உண்மை என்ன?” என்ற நித்தியக் கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடிக்கும்படிச் சொல்கிறது.

உண்மை என்பது கோட்பாடு அல்ல, ஊகம் சார்ந்த தத்துவ அமைப்பும் அல்ல. உண்மை என்பது மாபெரும் மெய்ம்மையுடன் துல்லியமாகத் தொடர்பு கொள்வதாகும். மனிதனுக்கு, உண்மை, தன் மெய்யான இயல்பின், தன் பெரும் சுயத்தை ஆன்மாவாக உணரும், அசைக்க முடியாத ஞானம் ஆகும்.

இறுதியில் இறைவனின் மற்றும் படைப்பின் முடிவான இரகசியங்களைப் பற்றிய ஊகங்கள் அனைத்தும் பலனற்றவைகளாகும். அப்பட்டமான நிதர்சனம் எப்போதும் நம்முடன் இருக்கிறது: மனிதன் இங்கே இருக்கிறான் மற்றும் மனிதப்பிறவி எனும் வேதனைமிக்க சோதனைகளுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறான். கைதிகள் தமது விடுதலையை மீண்டும் பெற இடைவிடாது திட்டமிடுவதைப் போல, மனிதர்களில் விவேகமிக்கவர்கள் நிலையற்றது எனும் சிறையிலிருந்து தப்பிச் செல்லப் பெருமுயற்சி செய்கின்றனர்.

கிரியா யோகம் ஆன்மாவைப் பரம்பொருளுக்கு விண்ணேற்றும் ஓர் அனைவருக்கும் பொதுவான பெருவழியைச் சுட்டிக்காட்டுவது மட்டுமன்றி, மனித குலத்திற்கு நாள்தோறும் பயன்படக்கூடிய ஓர் உத்தியையும் வழங்குகிறது; அதன் பயிற்சியின் வாயிலாக பக்தர், ஒரு குருவின் துணையுடன், இறைவனின் சாம்ராஜ்ஜியத்தினுள் மீண்டும் நுழையலாம். ஒரு கோட்பாட்டைச் சார்ந்த போதனை மற்றொன்றுக்கு மட்டுமே இட்டுச் செல்கிறது, ஆனால் கிரியா யோகத்தின் உண்மையான சாதகர் எவரும் அதை பரம்பொருளின் சாம்ராஜ்ஜியத்துக்கான மிகக் குறைவான தூரம் கொண்ட வழியாகவும் விரைவாகச் செல்லும் வாகனமாகவும் காண்கிறார்.

ஒரு நாத்திகரால் கூட கிரியாவின் வழக்கமான பயிற்சியிலிருந்து ஊற்றெடுத்து வரும் என்றும்-பெருகும் ஆனந்தத்தை மறுக்க முடியாது. ஒரு பயிற்சியளிப்பவராக, நான் என் பள்ளியில் நம்பிக்கையற்ற மாணவர்களின் மீது இந்த வழிமுறையை முயற்சி செய்தேன், மற்றும் அவர்கள் மாற்றப்படக் கண்டேன், என் சொற்களால் அல்ல, ஆனால் அதன் வழக்கமான பயிற்சியிலிருந்து விளையும் தொடர்ச்சியான மகிழ்விக்கும் பலன்களினால்.

மதம் அதன் கோட்பாட்டு வடிவத்தில் பகுதியளவே மனநிறைவளிப்பதாக இருக்கிறது, ஒருபோதும் முழுமையாக நம்பும்படியாக இல்லை. நான் என் குருதேவரின் வாழ்க்கை முறைக்கு மாற்றப்பட்டது, பகுதியளவு அவருடைய ஞானச் சொற்களால், ஆனால் முதன்மையாக கிரியா யோகத்தின் ஆழ்ந்த மற்றும் வழக்கமான பயிற்சியின் மீதான அவருடைய வலியுறுத்தல் எல்லையற்ற ஆனந்த அலைகளின் மீது மிதக்க என்னை இயலச் செய்த காரணத்தினால் ஆகும். லாஹிரி மகாசயரின் வழிமுறை என்றும்-பெருகும் மகிழ்ச்சியை எனக்கு அளித்தது மற்றும் தொடர்ச்சியாக அளித்துக் கொண்டிருக்கிறது என்று நான் உலகிற்கு அறிவிக்கிறேன்; மேலும், மனப்போக்கைப் பொருட்படுத்தாமல், அதைத் தீவிரமாகவும் வழக்கமாகவும் பயிற்சி செய்வோரிடம், அதனால் அதே பேரின்பத்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

பிராணாயாமத்தின் (உயிராற்றலை கட்டுப்படுத்துதல்) கிரியா யோக அறிவியல்

எந்த மதத்தின் பக்தரும் சோதிக்கப்படாத நம்பிக்கைகளாலும் விடாப்பிடியான கொள்கைகளாலும் மனநிறைவடையக் கூடாது, ஆனால் இறையனுபூதியை அடைவதற்கான நடைமுறைக்கேற்ற முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பக்தர் மரபுரீதியான வழிபாட்டைக் கொண்ட அல்லது பயனற்ற “மௌனத்திற்குள் செல்லும்” மேலோட்டமான வழிமுறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இறையனுபூதியின் ஓர் அறிவியல்பூர்வமான உத்தியைப் பயிற்சி செய்யத் துவங்க வேண்டும்.

இந்த இலக்கை மனரீதியான தியானத்தின் மூலமாக மட்டுமே ஒருவரால் அடைய முடியாது. மனத்தை மூச்சு, உயிராற்றல், புலன்கள் ஆகியவற்றிலிருந்து துண்டிக்கும் மற்றும் தன்முனைப்பை ஆன்மாவுடன் ஐக்கியமாக்கும் ஆழ்ந்த ஒருமுகப்பாடு மட்டுமே ஆன்ம-அனுபூதியின் இறை-ஞானத்தை உருவாக்குவதில் வெற்றிகரமானதாக இருக்கிறது.

உயிராற்றல்தான் பருப்பொருளுக்கும் பரம்பொருளுக்கும் இடையேயான தொடர்பு. புறத்தே பாய்ந்தவாறு அது போலியாக மயக்கும் புலன்களின் உலகத்தை வெளிப்படுத்துகிறது; அகத்தே திருப்பப்படும் போது அது உணர்வுநிலையை நிலைபேறாக மனநிறைவளிக்கும் இறைப் பேரின்பத்துக்கு இழுக்கிறது.

இரண்டு மனிதர்கள் வெவ்வேறு அறைகளில் தியானம் செய்து கொண்டிருந்தனர்; ஒவ்வோர் அறையிலும் ஒரு தொலைபேசி இருந்தது. ஒவ்வோர் அறையிலும் தொலைபேசி மணியடித்தது. ஒரு மனிதர் ஓர் அறிவார்ந்த பிடிவாத மனநிலையில் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்: “நான் தொலைபேசி அழைப்பைக் கேட்க இயலாத அளவிற்கு ஆழ்ந்து ஒருமுகப்படுவேன்!” புறச் சத்தம் இருந்த போதிலும், அவர் அகத்தே ஒருமுகப்படுவதில் வெற்றிபெறக்கூடும்; ஆனால் அவர் தன் வேலையைத் தேவையில்லாமல் சிக்கலாக்கிக் கொண்டுள்ளார். இந்த மனிதரை, ஒளி, ஓசை, நாற்றம், சுவை, ஊறு ஆகியவற்றின் இடைவிடாத தொலைபேசிச் செய்திகளையும், அத்துடன் உயிராற்றலின் வெளிநோக்கிய இழுவைகளையும் புறக்கணித்தவாறு, இறைவன் மீது தியானம் செய்ய முயற்சி செய்யும் ஒரு ஞான யோகியுடன் ஒப்பிடலாம்.

நமது விளக்க உதாரணத்தில் இரண்டாம் மனிதருக்கு தொலைபேசி மணியின் முரட்டுத்தனமான கூச்சலைப் புறக்கணிக்கும் ஆற்றலைப் பற்றி எந்தத் தவறான நம்பிக்கையும் இல்லை. அவர் விவேகமாக மின்செருகியை எடுத்து விட்டு கருவியைத் துண்டித்து விட்டார். அவரை, தியானத்தின் போது புலன்களிலிருந்து உயிராற்றலைத் துண்டித்துவிடுவதன் மூலம் எந்தப் புலன்சார் கவனச் சிதறல்களையும் தவிர்க்கும் கிரியா யோகியுடன் ஒப்பிடலாம்; பின்னர் அவர் உயிராற்றலின் ஓட்டத்தை உயர்நிலை மையங்களை நோக்கித் திருப்பி விடுகிறார்.

தியானம் செய்யும் பக்தர் இந்த இரு உலகங்களுக்கும் இடையே இருக்கிறார் மற்றும் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தினுள் நுழைய கடுமுயற்சி செய்கிறார், ஆனால் புலன்களுடன் போராடுவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். [கிரியா யோகம் போன்ற] ஒரு பிராணாயாம அறிவியல் உத்தியின் துணையுடன், யோகி இறுதியில் மூச்சு, இதயம், புலனால்-தூண்டப்பட்ட உயிராற்றல்கள் ஆகியவற்றின் இயக்கத்தில் தன் உணர்வுநிலையைப் புறத்தே நிலைப்படுத்திய வெளிநோக்கி-பாயும் உயிர்ச்சக்தியை எதிர்த்திசையில் திருப்புவதில் வெற்றிடைகிறார். அவர் ஆன்மா, பரம்பொருள் ஆகியவற்றின் இயல்பான அக அமைதி உலகில் நுழைகிறார்.

மனத்தையும் உயிராற்றலையும் புலன்சார் மற்றும் இயக்க நரம்புகளிலிருந்து பின்வாங்கியவாறு, யோகி அவற்றை முதுகுத்தண்டின் வாயிலாக மூளைக்குள், நிலைபேறான ஒளிக்குள் இட்டுச் செல்கிறார். இங்கு மனமும் உயிரும் மூளையில் வெளிப்படும் பரம்பொருளின் நிலைபேறான ஞானத்துடன் ஐக்கியமாகின்றன.

சராசரி மனிதனுக்கு உணர்வுநிலையின் மையம் அவனுடைய உடலிலும் வெளி உலகிலும் உள்ளது. யோகி உடலுடனும் உலகியல் எதிர்பார்ப்புகள், அச்சங்கள் ஆகியவற்றுடனும் பற்றில்லாமல் இருப்பதன் மூலம் தன் உணர்வுநிலையின் மையத்தை மாற்றுகிறார். கிரியா யோகம் போன்ற, உணர்வுநிலையை உடலுடன் தளைப்படுத்தும் உயிர்ச் செயல்முறைகளை உணர்வுப்பூர்வமாக கட்டுப்படுத்தும் (இதயத்தையும் மூச்சையும் இயக்கமற்று இருக்கச் செய்தல்) ஓர் உத்தியின் மூலம், யோகி மூளையில் உள்ள பேரண்ட உணர்வுநிலை எனும் ஆன்மீக மையத்தில் வெளிப்படுத்தும் பரம்பொருளின் நிலைபேறான ஞான-உணர்வில் நிலைபெறுகிறார். தன் உணர்வுநிலை மையத்தை புறத்தூண்டுதலுக்கு ஆட்படும் உடலிலிருந்து பரம்பொருளின் பெருமூளை-அரியணைக்கு மாற்ற முடிகின்ற யோகி முடிவாக தன் உணர்வுநிலையை சர்வ வியாபகத்தின் மீது மையப்படுத்துகிறார். அவர் நிலைபேறான ஞானத்தை அடைகிறார்.

கிரியா யோகப் பயிற்சி அமைதியையும் பேரின்பத்தையும் வழங்குகிறது

கிரியா யோகத்தின் பின்விளைவுகள் அவற்றுடன் அளவிலா அமைதியையும் பேரின்பத்தையும் கொண்டு வருகின்றன. கிரியாவுடன் வரும் ஆனந்தம் எல்லா இன்பமான உடல் உணர்ச்சிகளையும் ஒன்றாக வைப்பதால் வரும் ஆனந்தங்களை விட மிக அதிகமாகும். “புலன்சார் உலகிற்கு ஈர்க்கப்படாமல், யோகி பெரும் சுயத்தில் உள்ளார்ந்து இருக்கும் என்றும் புதிய ஆனந்தத்தை அனுபவிக்கிறார். ஆன்மாவின் பரம்பொருளுடனான தெய்வீக ஐக்கியத்தில் ஈடுபட்டவாறு, அவர் அழியாப் பேரின்பத்தை அடைகிறார்.”

நான் நியூ யார்க் நகரில் ஒரு செல்வந்தரைச் சந்தித்தேன். தன் வாழ்க்கையைப் பற்றி சில விஷயங்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த போது, அவர் நீட்டி முழக்கினார், “நான் (மற்றவர்கள்) பொறாமைப்படும் அளவிற்கு செல்வந்தன் மற்றும் பொறாமைப்படும் அளவிற்கு உடல்நலமிக்கவன்—“ மற்றும் அவர் முடிக்கும் முன் நான் வியந்துரைத்தேன், “ஆனால் பொறாமைப்படும் அளவிற்கு நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையே! என்றும் புதிய மகிழ்ச்சியில் இருப்பதில் நிலையான ஆர்வமிக்கவராக இருப்பது எப்படி என்று என்னால் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்.”

அவர் என் மாணவரானார். கிரியா யோகத்தைப் பயிற்சி செய்ததன் மூலம் மற்றும் இறைவனிடம் அகமுகமாக என்றும் பக்தியுடன் இருந்தவாறு ஒரு சமச்சீர் வாழ்க்கையை நடத்திச் சென்றதன் மூலம், அவர் என்றும் புதிய ஆனந்தத்துடன் எப்போதும் உற்சாகமாக ஒரு பழுத்த முதிய வயது வரை வாழ்ந்தார்.

தன் மரணப் படுக்கையில் அவர் தன் மனிவியிடம் கூறினார், “நான் செல்வதை நீ பார்க்க வேண்டியுள்ளதை எண்ணி நான் உனக்காக வருந்துகிறேன், ஆனால் நான் என் பிரபஞ்சப் பேரன்பனுடன் சேரப் போவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் ஆனந்தத்தைக் கொண்டாடு மற்றும் வருத்தப்படுவதன் மூலம் சுயநலமாக இராதே. நான் என் அன்பார்ந்த இறைவனைச் சந்திக்கப் போவதை எண்ணி நான் எத்துணை மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீ அறிந்தால், நீ சோகமாக இருக்க மாட்டாய்; நீ என்றாவது ஒருநாள் நிலைபேறான பேரின்பத்தில் என்னுடன் சேருவாய் என்று அறிந்து கொண்டு மகிழ்ச்சியாக இரு.”

கிரியாவை ஒருபோதும் தவிர்க்காமல் இருப்போர், மற்றும் தியானத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இறைவனிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்வோர், ஏங்கிய பெரும் பொக்கிஷத்தைக் கண்டுபிடிப்பார்கள்.

கிரியா அக உள்ளுணர்வு வழிகாட்டலை விழித்தெழச் செய்கிறது

Paramahansa Yogananda holding Autobiography of a yogi

கிரியா யோக அறிவியல் 1946ல் பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற புத்தக வெளியீட்டால் முதன்முறையாக உலக மக்களுக்குத் தெரிய வந்தது. புத்தகத்தில், அவர் பல வருடங்களுக்கு முன்பு தன் குருதேவருடன் தான் நடத்திய பின்வரும் உரையாடலை வெளிப்படுத்தினார்:

“யோகானந்தா,” வழக்கமான தீவிரத்துடன் ஸ்ரீ யுக்தேஸ்வர் கூறினார், “நீ பிறந்தது முதல் லாஹிரி மகாசயரின் சீடர்களால் சூழப்பட்டிருக்கிறாய். அந்த மகான் தன் விழுமிய வாழ்க்கையை பகுதியளவான தனிமையில் வாழ்ந்தார், மற்றும் அவரது போதனைகளை வைத்து எந்த நிறுவனத்தையும் உருவாக்க தன் சீடர்களுக்கு அனுமதி வழங்க நிறையுறுதியுடன் மறுத்து விட்டார். இருந்தபோதிலும் அவர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை வருமுன் உரைத்தார்.

“’நான் உயிர்நீத்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு,’ அவர் கூறினார், ‘மேற்கில் எழப்போகும் யோகத்தில் ஓர் ஆழ்ந்த ஆர்வத்தின் காரணமாக என் வாழ்க்கை வரலாறு எழுதப்படும். யோகப் போதனை உலகைச் சுற்றி வளைக்கும். அது மனிதச் சகோதரத்துவத்தை—மனிதகுலத்தின் ஒரே தெய்வத்தந்தை என்ற நேரடிக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒற்றுமையை—நிறுவுவதில் துணை புரியும்.’

“என் மகனே யோகானந்தா,” ஸ்ரீ யுக்தேஸ்வர் தொடர்ந்தார், “அந்தப் போதனையைப் பரப்புவதில் மற்றும் அந்தப் புனிதமான வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உன் பங்கை நீ ஆற்ற வேண்டும்.”

1895ல் லாஹிரி மகாசயர் உயிர்நீத்த பின் ஐம்பது ஆண்டுகள், இந்தத் தற்போதைய புத்தகம் எழுதி முடிக்கப்பட்ட ஆண்டான 1945ல் முடிவடைந்தன. 1945-ஆம் ஆண்டு  புரட்சிகரமான அணுச்சக்திகளின் யுகம் எனும் ஒரு புதிய யுகத்திற்குக் கட்டியம் கூறியது என்ற தற்செயல் நிகழ்வால் என்னால் தாக்கமுறாமல் இருக்க முடியவில்லை. எல்லாச் சிந்திக்கும் மனங்களும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமைதி, சகோதரத்துவம் ஆகிய அவசரப் பிரச்சனைகளுக்குத் திரும்பின…குறிப்பாக

[ஸ்ரீ யுக்தேஸ்வர் என்னிடம் கூறினார்:] “கிரியா யோகத்தால் மனத்தில் இருந்த புலன்சார் தடைகள் நீக்கப்பட்ட பிறகு, தியானம் ஓர் இரண்டடுக்கு இறைச் சான்றை அளிக்கிறது. என்றும் புதிய ஆனந்தம் நம் அணுக்களையே நம்பவைக்கும் அவனுடைய இருப்பின் சான்று. மேலும், தியானத்தில் ஒருவர் அவனுடைய உடனடி வழிகாட்டலை, ஒவ்வோர் இடர்ப்பாட்டிற்கும் போதுமான அவனுடைய மறுமொழியை, காண்கிறார்.”

ஆன்மா பரம்பொருளுடன் கொண்டத் தொடர்பை அனுபவிக்க—கிரியா யோகத்தில் உள்ளது போல, பாரபட்சமற்ற அக-ஆய்வினாலும் ஆழ்ந்த தியானத்தினாலும்—தன் உள்ளுணர்வைப் போதுமான அளவிற்கு வளர்த்துக் கொள்ளும் வரை எந்த பக்தரும் மனநிறைவடையக் கூடாது.

ஒரு பக்தர் நாள்தோறும் குறைந்தபட்சமாக சுருக்கமான கால அளவிற்குத் தீவிரமாகத் தியானம் செய்து, வாரத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ மூன்று அல்லது நான்கு மணி நேர நீண்ட கால அளவிற்கு ஆழ்ந்த தியானமும் செய்தால், ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்படும் பேரின்பமய ஞான உரையாடலை முடிவில்லாமல் உணர்ந்தறிய அவருடைய உள்ளுணர்வு தேவையான அளவு நுட்பநயமாக ஆவதை அவர் காண்பார். அவர் தன்மயமாக்கப்பட்ட ஒற்றுமை நிலையை அறிவார்; அந்நிலையில் அவருடைய ஆன்மா இறைவனுடன் “பேசி” அவனுடைய மறுமொழிகளைப் பெறுகிறது—எந்த மனித மொழிக் கூற்றுகளாலும் அல்ல, ஆனால் சொற்களற்ற உள்ளுணர்வுப் பரிமாற்றங்களின் வாயிலாக.

மேம்பட்ட கிரியா யோகியின் வாழ்க்கை, கடந்தகால விளைவுகளினால் அல்லாது, ஆன்மாவிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களினால் மட்டுமே தாக்கமுறுகிறது.

பிரச்சனைகளையும் கெட்ட பழக்கங்களையும் வெற்றிகொள்ளும் தெய்வீக வழி

பக்தரின் பிரச்சனை என்னவாக இருந்தாலும் சரி, லாஹிரி மகாசயர் அதன் தீர்வாக கிரியா யோகத்தைப் பரிந்துரை செய்தார்.

“நீங்கள் ஒரு நிதித்துறைத் தோல்வியாளர் அல்லது ஒரு தார்மீகத் தோல்வியாளர் அல்லது ஓர் ஆன்மீகத் தோல்வியாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ‘நானும் தெய்வத்தந்தையும் ஒன்றே,’ என்று சங்கல்பம் செய்தவாறு ஆழ்ந்த தியானத்தின் வாயிலாக நீங்கள் இறைவனின் குழந்தையே என்று அறிவீர்கள். அந்தக் கருத்தியலைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய ஆனந்தத்தை நீங்கள் உணரும் வரை தியானம் செய்யுங்கள். ஆனந்தம் உங்களுடைய இதயத்தைத் தாக்கும் போது, இறைவன் உங்களுடைய ஒலிபரப்பிற்கு மறுமொழியளித்திருக்கிறான்; அவன் உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் நேர்நிலையான சிந்தனைக்கும் மறுமொழியளித்துக் கொண்டிருக்கிறான். இது ஒரு தெளிவான மற்றும் திட்டவட்டமான வழிமுறை ஆகும்.

முதலில், “நானும் தெய்வத்தந்தையும் ஒன்றே” என்ற சிந்தனையின் மீது தியானம் செய்யுங்கள்; ஒரு பெரிய அமைதியையும் அதன்பின் உங்கள் இதயத்தில் ஒரு பெரிய ஆனந்தத்தையும் உணர முயற்சி செய்தவாறு தியானம் செய்யுங்கள். அந்த ஆனந்தம் வரும் போது, ‘தெய்வத்தந்தையே, நீ என்னுடன் இருக்கிறாய். என் மூளை-உயிரணுக்களிலிருந்து தவறான பழக்கங்களையும் கடந்தகால விதைப் போக்குகளையும் வறுத்தெடுக்கும்படி என்னுள் இருக்கும் உன் சக்திக்கு ஆணையிடுகிறேன்.’ என்று கூறுங்கள். நீங்கள் ஆண் அல்லது பெண் என்ற வரையறுக்கும் உணர்வுநிலையை உங்களிடமிருந்து வெளியேற்றுங்கள்; நீங்கள் இறைவனின் குழந்தை என்று அறிந்து கொள்ளுங்கள். பின் மனத்தளவில் சங்கல்பம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்: ‘என்னை மாற்றும் படி, என்னை ஒரு கைப்பாவையாக ஆக்கியிருக்கும் கெட்ட பழக்கங்களின் பள்ளங்களை அழிக்கும் படி என் மூளை உயிரணுக்களுக்கு ஆணையிடுகிறேன். எம்பெருமானே, அவற்றை உன் தெய்வீக ஒளியில் எரித்து விடு.’ மேலும் நீங்கள் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா தியான உத்திகளை, குறிப்பாக கிரியா யோகத்தைப் பயிற்சி செய்யும் போது, நீங்கள் இறைவனின் ஒளி உங்களுக்கு ஞானஸ்நானம் செய்வதை உண்மையாகவே பார்ப்பீர்கள்.

இந்தியாவில், பண்பற்ற மனநிலை கொண்ட ஒரு மனிதர் என்னிடம் வந்தார். தான் கோபப்படும் போது தன் மேலதிகாரிகளைக் கன்னத்தில் அறைவதில் கைதேர்ந்தவர், அதனால் தானும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வேலைகளை இழந்தார். தனக்குத் தொல்லை கொடுப்பவர் எவராயினும் கையில் கிடைத்த எதையும் அவர்கள் மீது எறியும் அளவிற்கு அவர் அத்துணை கட்டுக்கடங்காத கோபத்தைக் கொண்டவராக ஆகிவிடுவார். அவர் உதவி செய்யும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். நான் கூறினேன், “அடுத்த முறை நீங்கள் கோபப்படும் போது, நீங்கள் எதிர்வினையாற்றும் முன் ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள்.” அவர் முயற்சி செய்தார், ஆனால் அவர் என்னிடம் திரும்பி வந்து சொன்னார், “நான் அவ்வாறு செய்யும் போது நான் அதிகமாகக் கோபப்படுகிறேன். நான் எண்ணிக் கொண்டிருக்கும் போது, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்று நான் கட்டுக்கடங்காத ஆத்திரமடைகிறேன்.” அவருடைய நிலைமை நம்பிக்கையற்றதாகத் தோன்றியது.

பின்னர் நான் கிரியா யோகத்தை இந்தக் கூடுதலான அறிவுறுத்தலுடன் பயிற்சி செய்யும்படிக் கூறினேன்: “கிரியா யோகத்தைப் பயிற்சி செய்த பிறகு, தெய்வீகப் பேரொளி உங்களுடைய மூளைக்குள் சென்று கொண்டிருப்பதாக, அதை அமைதிப்படுத்துவதாக, உங்களுடைய நரம்புகளை அமைதிப்படுத்துவதாக, உங்களுடைய உணர்ச்சிவேகங்களை அமைதிப்படுத்துவதாக, கோபம் முழுவதையும் துடைத்து விடுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். மற்றும் ஒருநாள் உங்களுடைய மனநிலை ஆர்ப்பாட்டங்கள் சென்றுவிடும்.” அதற்குப் பிறகு குறுகிய காலத்திலேயே, அவர் என்னிடம் திரும்பி வந்தார் மற்றும் இந்த முறை சொன்னார், “நான் கோபப்படும் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டேன். உங்களுக்கு மிக்க நன்றி.”

நான் அவரைச் சோதிக்க முடிவு செய்தேன். அவருடன் சண்டையிட சில சிறுவர்களை ஏற்பாடு செய்தேன். பூங்காவில் நடப்பதைக் கவனிக்க அவர் வழக்கமாக கடந்து செல்லும் பாதையில் மறைந்து கொண்டேன். சிறுவர்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் சண்டையிடத் தூண்டினர், ஆனால் அவர் எதிர்வினை ஆற்றவில்லை. அவர் அமைதியாக இருந்தார்.

இறைவனுடய தொடர்பில் இருப்பதன் மூலம் நீங்கள் உங்களுடைய நிலையை ஓர் அழியும் இருப்பிலிருந்து ஓர் அமரத்துவ இருப்பிற்கு மாற்றுகிறீர்கள். நீங்கள் இதைச் செய்யும் போது, உங்களை வரையறைப் படுத்தும் எல்லாத் தளைகளும் அறுபடும். இது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மிகவும் சிறப்பான விதிமுறை. உங்களுடைய கவனம் குவிக்கப்பட்டவுடன், சக்திகளுக்கெல்லாம் பெரிய மகாசக்தி வரும், மற்றும் அதை வைத்து உங்களால் ஆன்மீக, மன, மற்றும் பொருள்சார் வெற்றியை அடைய முடியும்.

முழுநிறைவான அன்பைக் காணுதல்

உங்களால் அனுபவிக்க முடிகின்ற மிகப்பெரிய அன்பு தியானத்தில் இறைவனுடனான கூட்டுறவில் இருக்கிறது. ஆன்மாவிற்கும் பரம்பொருளுக்கும் இடையேயுள்ள அன்பே நீங்கள் அனைவரும் தேடும் முழுநிறைவான அன்பு….நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்தால், எந்த மனித மொழியாலும் விளக்க முடியாத அளவிலான ஓர் அன்பு உங்கள் மீது வரும், மற்றும் அந்தத் தூய அன்பை உங்களால் மற்றவர்களுக்கு வழங்க முடியும்….நீங்கள் அந்தத் தெய்வீக அன்பை அனுபவிக்கும் போது, மலருக்கும் விலங்கிற்கும் இடையே, ஒரு மனிதருக்கும் மற்றொருவருக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். நீங்கள் இயற்கை முழுவதுடனும் தோழமை கொள்வீர்கள், மற்றும் நீங்கள் மனிதகுலம் முழுவதிடமும் சமமாக அன்பு செலுத்துவீர்கள்.

அச்சத்திலிருந்தும் பாதுகாப்பின்மையிலிருந்தும் விடுதலை

அச்சத்தின் முடிவு இறைத் தொடர்புடன் வருகிறது, வேறேதுமில்லை. ஏன் காத்திருக்க வேண்டும்? யோகத்தின் வாயிலாக உங்களால் அந்தத் தொடர்பைப் பெற முடியும்….நீங்கள் இறைவனைக் காணும் போது, நீங்கள் பெறப்போகும் உத்திரவாதமும் அச்சமின்மையும் தான் என்னே! அப்போது வேறு எதுவும் பொருட்டல்ல, என்றும் எதனாலும் உங்களை அச்சப்பட வைக்க முடியாது. உங்கள் ஒவ்வொருவருக்குமான என் பிரார்த்தனை, இன்று முதல் நீங்கள் இறைவனுக்காக ஓர் உச்சபட்ச முயற்சியை எடுப்பீர்கள், மற்றும் நீங்கள் அவனில் நிலைபெறும் வரை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள் என்பதேயாகும். நீங்கள் அவனை நேசித்தால் நீங்கள் கிரியாவை மிக அதிகமான பக்தியுடனும் விசுவாசத்துடனும் பயிற்சி செய்வீர்கள். பிரார்த்தனையின் வாயிலாகவும் கிரியா யோகத்தின் வாயிலாகவும் அவனைத் தொடர்ந்து நாடுங்கள். நல்ல உற்சாகத்துடன் இருங்கள், ஏனெனில் பாபாஜி ஒருமுறை பகவத் கீதையிலிருந்து மேற்கோள் காட்டியவாறு கூறினார்: “இந்த உண்மையான சமயத்தின் ஒரு சிறு அளவே கூட ஒருவரை மிகப்பெரிய அச்சத்திலிருந்து (பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும் சுழற்சிகளில் உள்ளார்ந்து இருக்கும் மாபெரும் துன்பங்களிலிருந்து) பாதுகாக்கிறது.” “ஏழு நட்சத்திரங்களின் புதிரை” பற்றியும் “ஏழு தேவாலயங்களை” பற்றியும் யோவான் பேசினார் (திருவெளிப்பாடு 1:20); இந்தக் குறியீடுகள் முதுகுத்தண்டில் உள்ள ஏழு சூட்சும ஒளி மையங்களைக் குறிப்பிடுகின்றன. பைபிளின் இந்தப் புரிந்து கொள்ளப்படாத அத்தியாயத்தின் முழுதூடும் உள்ள மறைபொருளான உருவகங்கள், “ஏழு முத்திரைகளால் மூடப்பட்ட புத்தகம்” எனும் இந்த உயிர், உணர்வுநிலை ஆகியவற்றின் மையங்களைத் திறப்பதால் வரும் வெளிப்பாடுகளின் உருவக அமைப்பாகும்” (திருவெளிப்பாடு 5:1). 2011-ஆம் ஆண்டில் வெளியான கோடைக்கால யோகதா சத்சங்க இதழிலிருந்து.

இதைப் பகிர