கிரியா யோக தியானப் பாதை

ஒளிரும் ஸ்மிருதி மந்திர், ராஞ்சி

“இந்திய யோகியரும் முனிவர்களும், மற்றும் இயேசுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிந்திருந்த திட்டவட்டமான தியான அறிவியல் மூலம், இறைவனை நாடும் எவராலும் இறைவனின் பிரபஞ்சமளாவிய அறிவுத்திறனைத் தனக்குள் பெறுவதற்கு தன் உணர்வுநிலையை எல்லாம்-அறியும் பேரறிவிடம் விரிவாக்க முடியும்.”

—பரமஹம்ஸ யோகானந்தர்

விவேகம், படைப்புத்திறன், பாதுகாப்பு, மகிழ்ச்சி, நிபந்தனையற்ற அன்பு — நமக்கு உண்மையான மற்றும் நீடித்த ஆனந்தத்தைக் கொண்டுவரும் அதைக் காண்பது மெய்யாகவே சாத்தியமா?

தெய்வீக ஆனந்தத்தை நம் சொந்த ஆனந்தமாக உரிமை கோரியவாறு, நமது சொந்த ஆன்மாக்களில் தெய்வீகத்தை அனுபவிப்பது — இதுதான் பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோகப் போதனைகள் நம் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாகும்.

புனிதமான கிரியா யோக அறிவியல் தியானத்தின் மேம்பட்ட உத்திகளை உள்ளடக்கியது; அவற்றை ஈடுபாட்டுடன் பயிற்சி செய்வதானது, இறை-அனுபூதிக்கும் ஆன்மாவை, அடிமைத் தனத்தின் எல்லா வடிவங்களிலிருந்து விடுதலைக்கும் வழிநடத்திச் செல்கிறது. அது தெய்வீக ஐக்கியத்திற்கான உத்தி, அதாவது, யோகத்தின் இராஜ அல்லது ஒப்பற்ற உத்தி ஆகும். (படியுங்கள்: “யோகம் என்றால் என்ன, மெய்யாகவே?”)

கிரியா யோகத்தின் வரலாறு

ஞானஒளி பெற்ற இந்திய முனிவர்கள் கிரியா யோக ஆன்மீக அறிவியலை மறக்கப்பட்டுவிட்ட தொல்காலத்தில் கண்டுபிடித்தனர். பகவான் கிருஷ்ணன் அதைப் பகவத் கீதையில் உயர்வாகப் போற்றுகிறான். பதஞ்சலி முனிவர் அதைப் பற்றி தன் யோக சூத்திரங்களில் கூறுகிறார். இந்தப் புராதன தியான வழிமுறையானது, இயேசு கிறிஸ்துவிற்கும், அத்துடன் புனித யோவான், புனித பால் போன்றவர்களுக்கும் ஏனைய சீடர்களுக்கும் தெரிந்திருந்தது என்று பரமஹம்ஸ யோகானந்தர் கூறியிருக்கிறார்.

கிரியா யோகம் இருண்ட யுகங்களில் பல நூற்றாண்டுகளாக இழக்கப் பட்டிருந்தது மற்றும் தற்போதைய காலங்களில் மகாவதார பாபாஜியால் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டது; அவருடைய சீடரான லாஹிரி மகாசயர் தான் நம் யுகத்தில் அதை முதலில் வெளிப்படையாகப் போதித்தவர். பின்னர், பாபாஜி, ஆன்மாவை-வெளிப்படுத்தும் இந்த உத்தியை உலகுக்கு வழங்க பரமஹம்ஸ யோகானந்தரைப் பயிற்றுவித்து மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பும்படி லாஹிரி மகாசயரின் சீடரான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியைக் (1855-1936) கேட்டுக் கொண்டார்.

பரமஹம்ஸ யோகானந்தர், புராதன கிரியா யோக அறிவியலை உலகமெங்கும் உள்ள சாதகர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக வணங்குதற்குரிய தனது குரு பரம்பரையால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்த நோக்கத்திற்காகத்தான் அவர் யோகதா சத்சங்க சொஸைடியை 1917-ம் ஆண்டும், ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-பை 1920-ம் ஆண்டும் நிறுவினார்.

முன்னர் உலகைத் துறந்து துறவிகளாக தனிமையில் வாழ்ந்த விசுவாசமிக்க ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்த புராதன கிரியா யோகத்தை இந்திய மகான்கள், இப்போது உலகம் முழுவதும் உள்ள எல்லா உண்மையான சாதகர்களுக்கும் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவர் நிறுவிய ஆன்மீக நிறுவனம் (ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப்) எனும் இடைச் சாதனத்தின் வாயிலாக கிடைக்கும்படி செய்தனர்.

Mahavatar Babaji Altar photo
lahiri mahasaya altar photo
சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் பீடம் புகைப்படம்
Paramahansa Yogananda Alter kriya yoga

யோகானந்தர் எழுதினார்: “1920-ல் நான் அமெரிக்கா வரும்முன் தன் அருளாசிகளை வழங்கியவாறு, நான் இந்தப் புனிதப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததாக மகாவதார பாபாஜி என்னிடம் கூறினார்: ‘கிரியா யோகப் போதனையை மேற்கில் பரப்ப நான் தேர்ந்தெடுத்திருப்பது உன்னைத் தான். வெகு காலத்திற்கு முன் உன் குரு யுக்தேஸ்வரை ஒரு கும்பமேளாவில் நான் சந்தித்தேன். நான் உன்னைப் பயிற்சிக்காக அனுப்புவேன் என்று அவரிடம் அப்போது கூறினேன்.’ பின் பாபாஜி முன்கணித்துக் கூறினார்: ‘இறை-அனுபூதிக்கான அறிவியல் உத்தியான கிரியா யோகம், இறுதியில் எல்லா நாடுகளிலும் பரவும் மற்றும் பரம்பொருளான தெய்வத் தந்தை பற்றிய மனிதனின் தனிப்பட்ட, எல்லைக் கடந்த ஞானத்தின் வாயிலாக நாடுகளை இணக்கமாக்குவதில் உதவி செய்யும்.’ ”

கிரியா யோக அறிவியல்

யோகத்தின் இலக்கை அடையும் மிக விரைவான மற்றும் மிகவும் ஆற்றல் வாய்ந்த அணுகுமுறையானது, சக்தியுடனும் உணர்வுநிலையுடனும் நேரடியாகச் செயல்தொடர்பு கொள்ளும் தியான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இந்த நேரடி அணுகுமுறைதான் பரமஹம்ஸ யோகானந்தரால் போதிக்கப்பட்ட குறிப்பிட்ட தியான முறைக்கு தனித்தன்மையை அளிக்கிறது. குறிப்பாக, கிரியா என்பது உடலில் உள்ள உயிர்ச் சக்தியின் நுட்பமான உயிரோட்டங்களை வலுப்படுத்தி, புத்துயிர் பெறச்செய்யும் மேம்பட்ட இராஜயோக உத்தியாகும். இதனால் இதயம் மற்றும் நுரையீரல்களின் வழக்கமான செயல்பாடுகள் இயல்பாகவே மெதுவாகி விடுகின்றன. இதன் விளைவாக, உணர்வுநிலை புலனுணர்வின் உயர்ந்த தளங்களுக்கு ஈர்க்கப்படுகிறது; அது மனமோ அல்லது புலன்களோ அல்லது சாதாரண மனித உணர்ச்சிகளோ கொடுக்க முடிகின்ற அனுபவங்களில் எதையும்விட அதிகப் பேரின்பமயமான மற்றும் அதிக ஆழ்ந்த மனநிறைவை அளிக்கும் ஓர் அக விழிப்புணர்வை படிப்படியாகக் கொணர்கிறது. மனிதன் சீர்கேடு அடையும் உடல் அல்ல, ஆனால் என்றும் வாழும் ஓர் ஆன்மா என்று எல்லா சமய நூல்களும் பறைசாற்றுகின்றன. புராதன கிரியா யோக அறிவியல், இந்த மறைநூல் உண்மையை நிரூபிப்பதற்கான ஒரு வழியை வெளிப்படுத்துகிறது. கிரியா அறிவியலை சிரத்தையுடன் பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நிச்சயமான மற்றும் முறைப்படியான பலாபலனைக் குறிப்பிட்டு, பரமஹம்ஸ யோகானந்தர் அறிவித்தார்: “அது கணிதத்தைப் போல செயல்படுகிறது; அது தவற முடியாது.”

கிரியா யோகப் பாதையின் தியான உத்திகள்

‘இறைவன் தன் அளவிலாக் கொடைகளை வழங்குவதற்காக விருப்பமுள்ள இதயங்களைத் தேடுகிறான்….’ அது மிகவும் அழகானது, மற்றும் அதைத்தான் நான் நம்புகிறேன். இறைவன் தன் வெகுமதிகளை வழங்குவதற்காக விருப்பமுள்ள இதயங்களைத் தேடுகிறான். அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக உள்ளான், ஆனால் நாம் ஏற்றுக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு விருப்பமின்றி இருக்கிறோம்.”

பரமஹம்ஸ யோகானந்தர் தனது ஒரு யோகியின் சுயசரிதம்-ல் கிரியா யோகம் பற்றிய ஒரு விளக்கத்தை அளிக்கிறார். உண்மையான உத்தியானது, யோகதா சத்சங்கப் பாட மாணவர்கள், பரமஹம்ஸ யோகானந்தரால் போதிக்கப்பட்ட மூன்று ஆயத்தமாக்கும் உத்திகளை ஒரு பூர்வாங்க காலம் வரை கற்று, பயிற்சி செய்த பின்னர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தத் தியான உத்திகளை, ஒரு விரிவான தொகுதியாக ஒன்று சேர்த்து பயிற்சி செய்வதானது, புராதன யோக அறிவியலின் மிக உயர்ந்த பலன்களையும் தெய்வீக இலக்கையும் அடைவதை சாதகருக்கு சாத்தியமாக்குகிறது.

1. சக்தியூட்டும் உடற்பயிற்சிகள்

தியானத்திற்காக உடலைத் தயார் செய்ய உள-உடலியல் பயிற்சிகளின் ஒரு தொகுதி 1916-ல் பரமஹம்ஸ யோகானந்தரால் உருவாக்கப்பட்டது. முறை தவறாத பயிற்சியானது, மன மற்றும் உடல் ரீதியான தளர்த்துதலை மேம்படுத்தி ஆற்றல்வாய்ந்த இச்சாசக்தியை வளர்க்கிறது. மூச்சு, உயிராற்றல், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் ஆகியவற்றைப் பயன் படுத்தி, இவ்வுத்தி அபரிமிதமான சக்தியை உடலுக்குள் உணர்வு பூர்வமாக ஈர்த்து, எல்லா உடற் பகுதிகளையும் வரிசைமுறையாக தூய்மைப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஒருவரை ஏதுவாக்குகிறது. பயிற்சி செய்ய 15 நிமிடங்கள் எடுக்கும் சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அகற்றும் மிகுந்த பலனுள்ள வழிகளில் ஒன்றாகும். தியானத்திற்கு முன்பு அவற்றைப் பயிற்சி செய்வது ஓர் அமைதியான, உள்முகப்பட்ட விழிப்பு நிலைக்குள் நுழைவதற்கு பெரும் உதவியாக உள்ளது.

2. ஹாங்-ஸா ஒருமுகப்பாட்டு உத்தி

ஹாங்-ஸா ஒருமுகப்பாட்டு உத்தி ஒருமுகப்படுவதற்கான ஒருவரது உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்க்க உதவுகிறது. இந்த உத்தியைப் பயிற்சி செய்வதன் வாயிலாக ஒருவர் எண்ணத்தையும் சக்தியையும் வெளிப்புறக் கவனச் சிதறல்களிலிருந்து பின்னிழுக்கக் கற்றுக் கொள்கிறார்; அதனால் அவை அடைய வேண்டிய எந்த இலக்கின் மீதோ அல்லது தீர்க்க வேண்டிய பிரச்சனையின் மீதோ குவிக்கப் படலாம். அல்லது ஒருவர் அந்த ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தை அகத்தே தெய்வீக உணர்வு நிலையை உணர்ந்தறிவதை நோக்கிச் செலுத்தலாம்.

பகவான் கிருஷ்ணனும் & கிரியா யோகமும்

பரமஹம்ஸ யோகானந்தருடைய இறைப்பணியின் இன்றியமையாத இலக்குகளில் ஒன்று “பகவான் கிருஷ்ணனால் போதிக்கப்பட்ட ஆதி யோக முறைக்கும், இயேசு கிறிஸ்துவினால் போதிக்கப்பட்ட ஆதி கிறிஸ்துவ சமயத்திற்கும் இடையே உள்ள முழுமையான இணக்கத்தையும் அடிப்படையான ஒருமையையும் வெளிப்படுத்துதல்; மற்றும் சத்தியத்தின் இந்தக் கொள்கைகளே எல்லா உண்மையான சமயங்களுக்கும் பொதுவான விஞ்ஞானபூர்வமான அடிப்படை என்பதைக் காண்பித்தல்” ஆகும்.

“மற்ற பக்தர்கள் கருத்தூன்றிய பிராணாயாமப் பயிற்சியின் (கிரியா யோகத்தின் உயிர்-கட்டுப்பாட்டு உத்தி) மூலம் அபானன் எனும் வெளிச்சுவாசத்திற்கு பிராணன் எனும் உட்சுவாசத்தை அளித்து, பிராணன் எனும் உட்சுவாசத்திற்கு அபானன் எனும் வெளிச்சுவாசத்தை அளிக்கின்றனர்; இவ்வாறு (சுவாசத்தைத் தேவையற்றதாக ஆக்கியவாறு) உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசத்தின் நிகழ்வை தடை செய்கின்றனர்”.

காட் டாக்ஸ் வித் அர்ஜுனா:
தி பகவத் கீதா IV : 29

The Bhagavad Gita

3. ஓம் உத்தி

ஓம் எனும் தியான உத்தி ஒருவருடைய உண்மையான ஆன்மாவின் தெய்வீகப் பண்புகளை கண்டுபிடித்து, மேம்படுத்துவதற்கு ஒருமுகப்பாட்டு ஆற்றலை மிக உயர்ந்த வழியில், எவ்வாறு பயன்படுத்துவது என்று காட்டுகிறது. இந்தப் புராதன வழிமுறை எல்லாவற்றிலும்-ஊடுருவிப் பரந்திருக்கும் தெய்வீகப் பேரிருப்பை, படைப்பு முழுவதற்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் உள்ள வார்த்தை அல்லது பரிசுத்த ஆவி எனப்படும் ஓங்கார நாதமாக எப்படி அனுபவிப்பது என்று கற்பிக்கிறது. இவ்வுத்தி விழிப்புணர்வை, உடல் மற்றும் மனத்தின் வரையறைகளுக்கு அப்பால் ஒருவரின் எல்லையற்ற உள்ளார்ந்த ஆற்றலின் ஆனந்தமய அனுபூதிக்கு விரிவடையச் செய்கிறது.

4. கிரியா யோக உத்தி

கிரியா என்பது பிராணாயாமத்தின் (உயிர் சக்திக் கட்டுப்பாடு) ஒரு மேம்பட்ட இராஜ யோக உத்தியாகும். கிரியா, முதுகுத் தண்டிலும் மூளையிலும் உயிர் சக்தியின் (பிராணன்) நுட்பமான உயிரோட்டங்களை வலுப்படுத்தி, அவற்றிற்குப் புத்துயிரூட்டுகிறது. புராதன இந்திய ரிஷிகள் மூளையையும் முதுகுத் தண்டையும் ஜீவ மரமாகக் கண்டுணர்ந்தனர். உயிர் மற்றும் உணர்வுநிலையின் நுட்பமான மூளை-முதுகுத்தண்டு மையங்களிலிருந்து (சக்கரங்கள்) உடலின் எல்லா நரம்புகளுக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் திசுவிற்கும் உயிர்த்துடிப்பூட்டும் சக்திகள் பாய்கின்றன. சிறப்பான கிரியா யோக உத்தியின் மூலம் உயிரோட்டத்தை முதுகுத்தண்டின் மேலும் கீழும் தொடர்ச்சியாகச் சுழற்றுவதனால், ஒருவருடைய ஆன்மீகப் பரிணாம வளர்ச்சியையும் விழிப்புணர்வையும் பெருமளவில் விரைவுபடுத்துவது சாத்தியம் என்று யோகிகள் கண்டுபிடித்தனர்.

கிரியா யோகப் பயிற்சியை சரியாகச் செய்வதானது, இதயம், நுரையீரல்களின் மற்றும் நரம்பு மண்டலத்தின் வழக்கமான செயல்பாடுகளை இயல்பாகவே மெதுவாக செயல்பட ஏதுவாக்குகிறது; இது உடல் மற்றும் மனத்தின் ஆழ்ந்த அக அமைதியை உருவாக்கி, கவனத்தைச் சிந்தனைகள், உணர்ச்சிவேகங்கள், புலனுணர்வுகள் ஆகியவற்றின் வழக்கமான கிளர்ச்சிகளிலிருந்து விடுவிக்கிறது. அந்த அக அமைதியின் தெளிவில், ஒருவர் ஓர் ஆழ்ந்த உட்புற அமைதியையும் ஒருவருடைய ஆன்மா மற்றும் இறைவனுடன் இசைவையும் அனுபவிக்க நேருகிறது.

7 chakras in human bodyகிரியா யோகத்தைக் கற்பது எப்படி​

முதற்படியாக யோகதா சத்சங்கப் பாடங்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும். வீட்டிலிருந்தே பாடத்தைக் கற்பதற்கான முதல் வருடத்தில், மாணவர்கள் மூன்று அடிப்படை தியான உத்திகளையும் (மேலே விவரிக்கப்பட்டுள்ளன) பரமஹம்ஸரின் சரிசம நிலையுடைய ஆன்மீக வாழ்வின் தத்துவங்களையும் கற்கின்றனர்.

இந்தப் படிப்படியான அறிமுகத்திற்கு ஒரு நோக்கம் உள்ளது. இமயமலையில் ஏற விரும்பும் மலை ஏறுபவர் சிகரங்களில் ஏறும் முன் முதலில் தன்னை அத்தட்பவெப்ப நிலைக்கேற்ப பழக்கப்படுத்திக் கொள்ளவும் ஒருநிலைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். ஆகவே சாதகருக்கு தனது பழக்கங்களையும் சிந்தனைகளையும் புதிய சூழலுக்குப் பழக்கமாக்கிக் கொள்ளவும், மனத்தை ஒருமுகப்பாட்டாலும் பக்தியாலும் ஒருநிலைப்படுத்திக் கொள்ளவும், உடலின் உயிர்ச் சக்தியைச் செலுத்துவதற்குப் பயிற்சி செய்யவும் இந்த ஆரம்ப காலம் தேவைப்படுகிறது. அதன்பின் யோகி, அனுபூதிக்கான முதுகுத்தண்டுப் பெருவழியில் மேலேறத் தயாராக இருக்கிறார். ஒரு வருடகால ஆயத்தத்திற்கும் பயிற்சிக்கும் பிறகு, மாணவர்கள் கிரியா யோக உத்தியில் தீட்சைக்காக விண்ணப்பம் செய்யவும், பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவருடைய இறையனுபூதி பெற்ற குரு பரம்பரையுடன் காலத்தால் போற்றப்பட்டு வரும் குரு-சிஷ்ய உறவை முறைப்படியாக ஏற்படுத்திக் கொள்ளவும் தகுதி பெறுகின்றனர்.

நீங்கள் யோகதா சத்சங்கப் பாடங்களுக்காக இதுவரை பதிவு செய்யவில்லை என்றால், இந்தப் பக்கங்களில் தியானம் செய்வது எப்படி என்பதன் மீதான சில ஆரம்ப அறிவுறுத்தல்களைக் காண்பீர்கள், தியானம் கொணரும் பலன்களை அனுபவிக்கத் துவங்க அவற்றை உங்களால் உடனடியாகப் பயன்படுத்த முடியும்.

ராஞ்சியின் ஸ்மிருதி மந்திரில் பக்தர்கள் தியானம் செய்தல்

குரு-சிஷ்ய உறவு

கிரியா யோகம் என்பது யோகதா சத்சங்க சொஸைடியின் தீட்சை ஆகும். கிரியா யோகத் தீட்சையைப் பெறுவதன் மூலம், மாணவர்கள் பரமஹம்ஸ யோகானந்தரைத் தமது குருவாக (ஆன்மீக வழிகாட்டியாக) ஏற்றுக்கொண்டு, புனிதமான குரு-சிஷ்ய உறவினுள் நுழைகின்றனர்.  குரு-சிஷ்ய உறவு பற்றி மேலும் படியுங்கள்.

கிரியா யோகத்தைப் பற்றி மேலும் படியுங்கள்

பிறர்த்தனையின்போது பக்தரைக் காணும் கடவுளின் கண்கள்

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் விவரிக்கப்பட்டபடி கிரியா யோகத்தின் பலன்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

பரமஹம்ஸ யோகானந்தர்

ஆன்ம முக்திக்கான முதன்மையான உத்தியாக விளங்கும் கிரியா யோகத்தின் இயல்பு, பங்கு மற்றும் செயலாற்றல் பற்றி பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.

கிரியா யோகம் உங்களுடைய மூளை உயிரணுக்களை மாற்றுகிறது

கிரியா யோகம் எப்படி மூளையில் பயனுள்ள மாற்றங்களைக் கொண்டுவர உதவுகிறது என்பதைப் பற்றி மேலும் படியுங்கள்; இது எதிர்மறைப் பழக்கங்களை வெல்தற்கான ஒரு குறிப்பிட்ட வழிமுறையையும் உள்ளடக்கியது.

கிரியா யோகத்தின் 150 ஆண்டுகள்

2011-ல் எஸ் ஆர் எஃப் / ஒய் எஸ் எஸ்–ஆல் கொண்டாடப்பட்ட கிரியா யோக மறுமலர்ச்சியின் 150-வது ஆண்டு நிறைவின் ஒரு நினைவு விழா.

கிரியா யோகாவின் மரத்தை சித்தரிக்கும் பருத்தி மரம்

பரமஹம்ஸ யோகானந்தர் ஆன்மாவைப் பற்றிய இந்த புனித அறிவியலை உலகமெங்கும் பரப்பினார்; அதனால் அருளாசி பெற்ற ஆயிரக்கணக்கானோரில் சிலருடைய சான்றுகள்.

பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook
X
WhatsApp
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.
This site is registered on Toolset.com as a development site.